top of page

2. எதை எடுப்பது?

எதுசரி? எதுசரி? வாழ்க்கையில் முடிவை தினமும் எடுப்பது எப்படி? - சின்ன
 கேசரி கிண்ணம், முந்திரி பருப்பு சொல்லுது சொல்லுது இப்படி. - எங்க
 அம்மா எளிதா புரிய வச்சாங்க. முடிவை எடுப்பது அப்படி - நீ
 சும்மா கதையை கேளு கேளு. கருத்தை நல்லா நீபடி.
 
 அம்மா ரெண்டு கிண்ணம் முழுக்க, கேசரி கிண்டி வச்சாங்க
 அன்பா அழைச்சு அண்ணனும் என்னையும் அழகா சாப்பிடச் சொன்னாங்க 
 அண்ணன் வந்தான் நானும் வந்தேன் ரெண்டு கிண்ணம் குடுத்தாங்க 
 எண்ணம் முழுக்க எந்தக் கிண்ணம் எடுப்பது என்று குழப்பங்க.
 
 வெள்ளை கிண்ணம் மேலே ரெண்டு முந்திரி உண்டு - அடடடடா!
 கருப்புக் கிண்ணம் மேலே முந்திரி ஒன்றும் இல்லை - ஐயோடா!
 முந்திக் கொண்டு முந்திரி உள்ள வெள்ளை கிண்ணம் எடுத்தேன்டா
 பிந்திக் கொண்ட அண்ணன் கருப்பு கிண்ணம் எடுக்க வைத்தேன்டா
 
 மேலே முந்திரி இருந்த தாலே உள்ளே இருக்கும் என்றே நான்
 மேம்போக்காக எண்ணி உள்ளேப்  பார்த்தேன் ஒன்றும் இல்லையே
 ஏமாற்றத்தில் அண்ணன் கிண்ணம் எட்டிப் பார்த்தேன். ஆச்சரியம்!
 ஏது இவ்வளவு முந்திரி உள்ளே எப்படி வந்தது என்றேன் நான்.
 
 சிரிச்சிக் கிட்டே அம்மா சொன்னா ‘சிந்தனை பண்ணு இனிமேலே!
 விரிச்ச வலையில் வீணா விழுந்த, எடுத்த அவசர முடிவாலே!!
 மேலே முந்திரி இருந்த தாலே, உள்ளே இருக்கும் என நீயே
 வீணே கருதி முடிவை எடுத்தாய், தவறு என்று உணர்வாயே!’ 
 
 அடுத்த தடவை கேசரி கிண்டி ரெண்டு கிண்ணம் தந்தாங்க
 எடுத்த கிண்ணம் மேலே முந்திரி இல்லா கருப்புக் கிண்ணங்க
 போன தடவை பண்ண தப்பை இந்த தடவை செய்யாம
 உள்ளே முந்திரி உள்ள கிண்ணம் எடுத்தேன் புத்திசாலிங்க
 
 கிளறிப் பாத்தேன் உள்ளே கூட முந்திரி இல்ல, ஏனுங்க?
 உளறிக் கொண்டே அம்மா முகத்தை ஏங்கிப் பார்த்தேன் நானுங்க.
 ‘முன்னே கொண்ட அனுபவம் மட்டும் முடிவுகள் எடுக்கப் போதாது
 பின்னே கஷ்டம் கூடும் கூடும்  பிள்ளை உனக்கு ஆகாது’
 
 என்ற அம்மா அடுத்த வாரம் கேசரி செஞ்சி கொடுத்தாங்க
 சென்ற வார அனுப வத்தில் புத்தி கொஞ்சம் வந்த தனால்
 ‘அம்மா! நீயே எடுத்துக் கொடம்மா. எது வானாலும் சரி எனக்கு
 நம்மால் இனிமேல் முடியா தெனவே வாய்ப்பைத் தந்தேன் நான் உனக்கு’
 
 ‘முடிவை நீயே எடுத்து விட்டால் முழுக்க முழுக்க வெற்றி தான்
 முடிவை மற்றவர் எடுத்து விட்டால் முடியும் உந்தன் வளர்ச்சி தான்
 கண்ணால் காண்பதை மட்டும் வைத்து முடிவை என்றும் எடுக்காதே!
 முன்னால் அனுபவம் மட்டும் வைத்து முடிவை நீயே கெடுக்காதே!!’
 
 என்றாள் அம்மா! கேசரி கொண்டு வாழ்க்கைப் பாடம் எனக்குத் தான்
 சொன்னாள் அம்மா முடிவு எடுக்கும் முக்கியமான வித்தை தான் -
 வென்றால் வாழ்வில் அம்மா சொன்ன பாடம் என்ற ஒன்றால் தான்
 நன்றாய் கற்றேன் அதனால் சொன்னேன் புரிந்தால் உமக்கு நன்றே தான்.
 
*******************
 
 கருத்து: முடிவெடுக்கும் கலை, கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், ஆலோசனை, தன் கையே தனக்கு உதவி, எல்லோருக்கும் பயன்
 எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்

Recent Posts

See All
4. அரசர் ஓவியம்

குமரேசன் ஓவியரு குடிசையில வாழ்ந்தாரு அரும்பு என்ற மனைவியோடு வறுமையில வாழ்ந்தாரு அந்த நாட்டு அரசனுக்கு வந்ததொரு அரிய ஆசை அச்சு அசலா...

 
 
 
3. மூங்கில் கூடும் மேலோகமும்

நல்லூர்ல ஞானி ஒருத்தர் இருந்தாரு - அவர் நல்ல செய்தி கொடுப்பதனால் சிறந்தாரு அன்பழகர் என்ற சீடர் சேர்ந்தாரு - ஒரு விஷப் பாம்பை அறையில் அவர்...

 
 
 

Comentarios


JOBA Logo transperent_edited.png

Inspiring Natural Living

John Britto Academy

JOBA

Registered in Australia: ASIC under section 33(8) of BNR Act 2011
 

bottom of page